பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடலாம்: கர்நாடகத்தில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடலாம்: கர்நாடகத்தில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Aug 2020 12:01 AM GMT (Updated: 19 Aug 2020 12:01 AM GMT)

கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடலாம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

நாடு முழுவதும் வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் தலை நகராக உள்ள பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று ஏற்கனவே மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக சிலைகளை எடுத்து சென்று ஏரி, குளங்களில் கரைக்க அனுமதி கிடையாது என்றும் மாநகராட்சி கமிஷனர் கூறி இருந்தார்.

அத்துடன் மாநகராட்சி உத்தரவை மீறி பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுபவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். மாநகராட்சியின் முடிவுக்கு இந்து அமைப்புகள் மற்றும் பெங்களூரு விநாயகர் சதுர்த்தி சமிதியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாநகராட்சியின் உத்தரவை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்து அமைப்பினர் அறிவித்திருந்தார்கள்.

அதே நேரத்தில் கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிப்பது, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடுவது, விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு எடுக்கலாம் என்று அரசு முதலில் உத்தரவிட்டு இருந்தது. அதன்பிறகு, கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என்பது உள்ளிட்ட 10 விதமான உத்தரவுகளை அரசு பிறப்பித்திருந்தது. பெங்களூரு மாநகராட்சி மற்றும் கர்நாடக அரசின் உத்தரவுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

குறிப்பாக ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக், அரசின் உத்தரவை மீறி கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் என்றும், வழக்கை கண்டு பயப்பட போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். இந்த நிலையில், கர்நாடகத்தில் வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும், எளிமையாக கொண்டாடும்படியும் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் நேற்று கூறி இருப்பதாவது:-

“கொரோனா காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை எளிமையான முறையில் கோவில்கள், மக்கள் தங்கள் வீடுகள், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான பகுதிகள், பொது இடங்களில் அதிக மக்கள் கூடாமல் விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம். பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுபவர்கள், 4 அடி உயரம் கொண்ட சிலைகளை வைத்து தான் வழிபட வேண்டும். அதற்கு மேல் உயரம் கொண்ட சிலைகளை வைத்து வழிப்பட அனுமதி இல்லை. அதுபோல், வீடுகளில் 2 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையை வைத்து மக்கள் வழிபடலாம். கிராமத்திற்கு ஒரு இடத்தில் மட்டும் விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம்.

நகர் புறங்களில் ஒரு வார்டு பகுதியில் ஒரு இடத்தில் வைத்து வழிபடலாம். அதுபற்றி விநாயகர் சதுர்த்தி குழுவினர், அமைப்பினர் முடிவு செய்து அரசிடம் முறையான அனுமதி பெற்று சிலையை வைத்து வழிபடலாம். எக்காரணத்தை கொண்டும் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. கொரோனா பாதிப்பு காரணமாக 20 பேருக்கு மிகாமலும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை மக்கள் வழிபடலாம். கிராமப்புறங்களில் ஏரி, குளங்களில் விநாயகர் சிலையை கரைத்து கொள்ளலாம். நகர்புறங்களில் நடமாடும் வாகனங்களில் கொண்டு வரப்படும் தொட்டிகளில் தான் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.” இவ்வாறு எடியூரப்பா கூறியுள்ளார்.

மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில் “கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும், மக்களின் விருப்பத்திற்காக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. கொரோனாவுக்கு மத்தியிலும் மக்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, அரசின் உத்தரவுகள் மற்றும் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடித்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன்,“ என்று கூறி உள்ளார்.

இதன் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி எளிமையாக கொண்டாடப்பட இருக்கிறது.

Next Story