தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி கட்டுமான பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி கட்டுமான பணிகள் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Aug 2020 11:00 PM GMT (Updated: 21 Aug 2020 5:40 PM GMT)

தூத்துக்குடி அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடியில் மாணவர் விடுதி கட்டுமான பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3¼ கோடி மதிப்பில் மாணவர் விடுதி கட்டப்பட உள்ளது. இந்த கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்கிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அந்த திட்டங்கள் அனைத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். பள்ளி, கல்லூரிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 100 மாணவர்கள் உணவு வசதியுடன் கூடிய தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிகள் 7 மாதங்களுக்குள் முடிக்கப்பட உள்ளது. மாணவ-மாணவிகள் சிரமம் இன்றி கல்வி பயில அரசு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் உதவிகளையும் செய்து வருகிறது. எனவே அரசின் சலுகைகளை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் சிறப்பாக கல்வி பயின்று வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட முன்னாள் செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குனர் பழனி, உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள பாண்டி முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி, கோவில் தலைவர் செல்லையா, செயலாளர் மணி, பெருளாளர் பெருமாள் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜைகளை ரகு பட்டர் செய்திருந்தார். தொடர்ந்து அமைச்சர் மந்தித்தோப்பு பூமா தேவி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

Next Story