தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்


தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2020 10:00 PM GMT (Updated: 22 Aug 2020 5:12 PM GMT)

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி,

விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அரசு அறிவுறுத்தி உள்ளது. நேற்று அதிகாலை முதல் அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விநாயகருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சுண்டல், பாயசம் உள்ளிட்ட பல்வேறு பலகாரங்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.

அதே போன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். அப்போது கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விநாயகருக்கு முககவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. விநாயகரின் அருகே சானிடைசரும் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மேலும் தூத்துக்குடி 2-ம் கேட் வரத விநாயகர் கோவிலில் நேற்று விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.

மாலையில் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த சிறிய விநாயகர் சிலைகளை தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று கடலில் கரைத்தனர்.

Next Story