தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்


தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
x
தினத்தந்தி 22 Aug 2020 10:30 PM GMT (Updated: 22 Aug 2020 5:53 PM GMT)

தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது எப்போது? என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

கோவில்பட்டி,

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

தமிழக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-க்கும் கீழே உள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட கடலையூரைச் சேர்ந்த 34 தியாகிகளுக்கு, அந்த ஊரில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அந்த நினைவு தூணில் ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாத இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க வருகை தர உள்ளார். அந்த கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களையும், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.

செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் தியேட்டர்களை திறப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இன்னும் கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். எனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story