நெல்லையில் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்


நெல்லையில் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2020 10:45 PM GMT (Updated: 22 Aug 2020 7:04 PM GMT)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்துக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் பூஜை நடத்தி கொண்டாடினார்கள்.

நெல்லை,

ஆவணி மாதம் வருகின்ற சதுர்த்திதான் விநாயகர் சதுர்த்தியாகும். மூல முதற்கடவுளான விநாயக பெருமானை ஆவணி மாத சதுர்த்தியில், அன்னை பார்வதி தேவி அனைத்து பலகாரங்களையும், அனைத்து பழங்களையும் வைத்து பூஜை செய்ததாக ஐதீகம். எனவே ஆண்டுதோறும் ஆவணி சதுர்த்தியன்று இந்துக்கள் அனைவரும் தங்களது வீட்டில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, அவல், பொரி, சுண்டல், பாயாசம், மாம்பழம் உள்ளிட்ட அனைத்து வகையான பழங்களையும் படைத்து விநாயக பெருமானை வழிபாடு நடத்துவார்கள்.

இதேபோல் அனைத்து பிள்ளையார் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். ஊர் மக்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது ஊரில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் களிமண்ணால் செய்யப்பட்ட பெரிய விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஒரு வாரம் வழிபாடு நடத்துவார்கள். இதன் பிறகு நீர்நிலைகளில் அந்த சிலைகளை கரைப்பார்கள். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு விட்டு தாமிரபரணி ஆற்றில் கரைப்பார்கள்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து கூட்டமாக நின்று வழிபாடு நடத்த கூடாது என்று தமிழக அரசும், கோர்ட்டும் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை.

நெல்லை மாநகர பகுதியில் கடந்த ஆண்டு எங்கு எல்லாம் சிலை வைத்து இருந்தார்களோ அந்த பகுதியில் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். இதனால் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்தனர். மாலையில் அந்த சிலைகளை அவர்களே ஆற்றில் கரைத்தனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, நெல்லை டவுன் லாலாசத்திரம் முக்கில் உள்ள கற்பகவிநாயகர் கோவில், வாசிக்க மீண்ட வன்னிமுத்து விநாயகர் கோவில், சாலை தெருவில் உள்ள சுந்தரவிநாயகர் கோவில், கொக்கிரகுளம் ஆற்றுபாலத்தில் உள்ள பாலவிநாயகர் கோவில், சந்திப்பில் உள்ள வெற்றி விநாயகர் கோவில் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், சிறப்பு பூஜையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபட்டனர்.

Next Story