ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி


ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி
x
தினத்தந்தி 23 Aug 2020 12:42 AM GMT (Updated: 23 Aug 2020 12:42 AM GMT)

ஊத்தங்கரை அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலியானார்கள்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோடாலவலசை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ஆனந்தி (வயது 13). அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகள் ராதிகா (13). ஆனந்தியும், ராதிகாவும் 7-ம் வகுப்பு முடித்து விட்டு 8-ம் வகுப்பு செல்ல இருந்தனர்.

இந்த நிலையில் சிறுமிகள் 2 பேரும் நேற்று அவர்களது தோழிகளுடன் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர். அந்த நேரம் கிணற்றில் உள்ள படிக்கட்டு வழியாக சிறுமிகள் இறங்கிய போது, ஆனந்தி மற்றும் ராதிகா ஆகிய இருவரும் தண்ணீரில் தவறி விழுந்தனர்.

பரிதாப சாவு

இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்கள். இதைப்பார்த்துக் கொண்டிருந்த மற்ற சிறுமிகள் கூச்சலிட்டனர். அதற்குள் 2 சிறுமிகளும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெவித்தனர்.

அவர்கள் வருவதற்குள் பொதுமக்களில் சிலர் கிணற்றில் குதித்து ராதிகாவின் உடலை மீட்டனர். பின்னர் வந்த தீயணைப்புத் துறையினர் ஆனந்தியின் உடலை மீட்டனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story