வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 25 Aug 2020 8:12 AM GMT (Updated: 25 Aug 2020 8:12 AM GMT)

வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் சதுப்பேரி ஏரி உள்பட 4 நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூர்,

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பொது இடங்களில் இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவினர், அப்பகுதி இளைஞர்கள் சுமார் 5 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்வார்கள். அவற்றை 3 நாட்கள் அல்லது 5 நாட்களுக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகேயுள்ள நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், அவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கவும் தமிழக அரசு தடைவிதித்தது. பொதுமக்கள் வீடுகளில் சிலைகள் வைத்து வழிபட்டு, அவற்றை நீர்நிலைகளில் கரைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

சிலைகள் கரைப்பு

வேலூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் விநாயகர் சிலைகளை கரைக்க சதுப்பேரி ஏரி, தாராபடவேடு ஏரி, விருதம்பட்டு பாலாறு, வி.ஐ.டி. பல்லைக்கழகம் பின்புறம் உள்ள கல்குவாரி ஆகிய 4 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சதுப்பேரி ஏரிக்கு செல்ல வசதியாக பாதை சீரமைக்கப்பட்டு தடுப்புவேலி, மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் 4 இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலை முதல் வேலூர் நகரை சேர்ந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் விநாயகர் சிலைகளை உற்சாகமாக கொண்டு வந்து சதுப்பேரி ஏரியில் கரைத்தனர். அதேபோன்று குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தும் தள்ளுவண்டியில் நீர்நிலைக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

வேலூர் கோட்டை அகழியில் சிலைகள் கரைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி நேற்று முன்தினம் சிலர் கரைத்தனர். அதனால் அகழியில் சிலைகளை கரைப்பதை தடுக்கும்பணியில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் அந்த வழியாக மோட்டார் சைக்கிள், தள்ளுவண்டியில் எடுத்து வந்த விநாயகர் சிலைகளை சதுப்பேரி ஏரியில் கரைக்கும்படி அறிவுறுத்தினர். வேலூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வருவதை கண்காணிக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story