நெல்லையில் பரவலாக மழை


நெல்லையில் பரவலாக மழை
x
தினத்தந்தி 26 Aug 2020 9:45 PM GMT (Updated: 26 Aug 2020 8:05 PM GMT)

நெல்லை மாநகர பகுதியில் நேற்று இடி, மின்னனுடன் பரவலாக மழை பெய்தது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நெல்லை, களக்காடு ஆகிய இடங்களில் மழை பெய்தது. அணைப்பகுதியில் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 536 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,404 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 102.55 அடியாக உள்ளது. 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 99.51 அடியாக உள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 74.35 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 12 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரம் கொண்ட கடனா நதியின் அணை நீர்மட்டம் 81.50 அடியாக உள்ளது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 79.25 அடியாக உள்ளது. 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.75 அடியாக உள்ளது. 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி விட்டது.

நெல்லையை பொறுத்த வரையில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. மதியம் வானில் கருமேகங்கள் திரண்டன. மதியம் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அப்போது சூறைகாற்றும் வீசியது.

நெல்லை டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் பகுதியில் மழை பெய்ததால், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.

Next Story