பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில், கொரோனா பாதித்த 275 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்: வைரஸ் தொற்று ஏற்பட்ட 16 பச்சிளம் குழந்தைகளும் குணமடைந்தன


பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில், கொரோனா பாதித்த 275 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்: வைரஸ் தொற்று ஏற்பட்ட 16 பச்சிளம் குழந்தைகளும் குணமடைந்தன
x
தினத்தந்தி 27 Aug 2020 10:00 PM GMT (Updated: 27 Aug 2020 9:51 PM GMT)

பெங்களூரு வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 275 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்ட 16 பச்சிளம் குழந்தைகள் குணமடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெண்களும், கர்ப்பிணிகளும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் பெரும்பாலும் வாணிவிலாஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு எந்த விதமான பிரச்சினையும் இன்றி பிரசவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் இதுவரை வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 275 கர்ப்பிணிகளுக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அந்த கர்ப்பிணிகள் அனைவருக்கும் வெற்றிகரமாக குழந்தைகள் பிறந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் வாணிவிலாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளில், 17 பச்சிளம் குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அந்த குழந்தைகள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், 16 குழந்தைகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளன. ஒரு குழந்தை இன்னும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா பாதித்த கர்ப்பிணிகள் ஆதங்கப்பட வேண்டாம் என்றும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story