ஈரோடு கொல்லம்பாளையத்தில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்த பொதுமக்கள்


ஈரோடு கொல்லம்பாளையத்தில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 29 Aug 2020 10:15 PM GMT (Updated: 29 Aug 2020 9:10 PM GMT)

ஈரோடு கொல்லம்பாளையத்தில் பொதுமக்கள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி கொல்லம்பாளையத்தில் சாக்கடை கால்வாய் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நன்னீர் ஓடையாக இருந்த இந்த கால்வாய், குடியிருப்புகள் அதிகரிப்பாலும் போதிய பராமரிப்பு இல்லாமலும் சாக்கடை கால்வாயாக மாறியது. இங்கு அந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதும், தேவையற்ற பொருட் களை வீசியும் வருகிறார்கள்.

இதனால் கொல்லம்பாளையம் ஓடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு விடும். இவ்வாறு பல மாதங்காளாக ஓடை அடைபட்டு சாக்கடை தேங்கியது. அதுமட்டுமின்றி, கால்வாயில் இருந்து சாக்கடை கழிவு அருகில் உள்ள குடிநீர் குழாய்களிலும் கலந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். சாக்கடையை சுத்தம் செய்யவும், தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கொல்லம்பாளையம் தாயுமானசுந்தரம் வீதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி சாக்கடையை சுத்தம் செய்யவும், குப்பைகளை அகற்றவும் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஒரு பொக்லைன் எந்திரம் மற்றும் குப்பை எடுத்துச்செல்லும் வாகனங்களை வாடகைக்கு எடுத்து சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் நீண்ட நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகளையும் அகற்றினார்கள்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ‘கொரோனா காலத்தில் வீதிகளில் குப்பை சேருவது மிகவும் ஆபத்துக்கு உரியது. இந்த பகுதியில் சுமார் 200 வீடுகள் உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. இங்கு தூய்மை பணி செய்யும் பணியாளர்கள் அவ்வப்போது வந்தாலும் முறையாக குப்பை அள்ளுவது இல்லை. சாக்கடை அடைப்பினையும் எடுப்பதில்லை. இதனால் ஏற்பட்ட பாதிப்பினை அகற்ற முடிவு செய்தோம். பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இந்த பணியை செய்து இருக்கிறோம். வருங்காலத்தில் இதுபோன்ற நிலைகள் ஏற்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Next Story