திருமானூர் அருகே பெண்ணை கொன்றவர் கைது குடிபோதையில் கொன்றதாக வாக்குமூலம்


திருமானூர் அருகே பெண்ணை கொன்றவர் கைது குடிபோதையில் கொன்றதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 29 Aug 2020 10:44 PM GMT (Updated: 29 Aug 2020 10:44 PM GMT)

திருமானூர் அருகே பெண்ணை கொன்றவர் கைது செய்யப்பட்டார். அவர் குடிபோதையில் கொன்றதாக போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழப்பழுவூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் மலர்கொடி (வயது 49). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அவரை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் மலர்கொடியை அரியலூர் மாவட்டம் கோவில்சீமை கிராமத்தை சேர்ந்த வீரமுத்து மகன் விஜயபாஸ்கர் (39) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது.

40 வழக்குகள்

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், குடிபோதையில் இருந்த போது, மலர்கொடியின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றேன். அப்போது, அவர் தடுக்க முயன்றதால் கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டேன் என தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட விஜயபாஸ்கர் மீது மலர்கொடியை கொலை செய்த வழக்கு மட்டுமின்றி, கொள்ளை, கொலை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் விஜயபாஸ்கரை அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story