நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் அமைச்சர் பேட்டி


நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 30 Aug 2020 12:11 AM GMT (Updated: 30 Aug 2020 12:11 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட எலந்தகுட்டை ஊராட்சி இ.புதுப்பாளையத்தில் ரூ.11 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். மேலும் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.7 கோடியே 20 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து ரூ.60 லட்சத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி தலைமை தாங்கினார். திருச்செங்கோடு உதவி கலெக்டர் (பொறுப்பு) மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில், தாசில்தார் தங்கம், வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் அருளப்பன், டேவிட், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் செந்தில், சந்திரசேகரன், நகர செயலாளர் வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒத்துழைப்பு

பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 1800 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவையான டாக்டர்கள், மருத்துவ வசதிகள் உள்ளன. மாவட்டத்தில் கொரோனாவை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11 பேர் இறந்துள்ளனர். மேலும் தொடர்ந்து பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா நோயாளிகள் இருந்த பகுதிகள் அடைக்கப்பட்டு, சுகாதார பணிகள் நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, பொதுமக்கள் முககவசம் அணிந்து, அடிக்கடி கைகழுவுவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

மின் மிகை மாநிலம்

டெல்டா விவசாயிகளுக்கு தற்போது 18 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் தேவைக்கு மேல் நம்மிடம் மின்சாரம், நிலக்கரி இருப்பில் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் 10-லிருந்து 18 மணி நேரம் வரை இருந்த மின்வெட்டு நிலைமை மாறி தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Next Story