அவினாசி அருகே விபத்தில் பலியான மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


அவினாசி அருகே விபத்தில் பலியான மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2020 12:20 AM GMT (Updated: 30 Aug 2020 12:20 AM GMT)

அவினாசி அருகே விபத்தில் பலியான மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

அவினாசி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த பச்சையப்பன் மகன் சுரேஷ் (வயது20). இவர் வீரபாண்டியில் உள்ள கல்லூரியில் பி.காம். முதலாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால் சுயமாக சம்பாதித்து செல்போன் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் கோவை மாவட்டம் நீலாம்பூரில் தங்கி கட்டிடப்பணி செய்துவந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் நீலாம்பூரில் இருந்து ஒருசரக்கு வேன் கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு அவினாசி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த வேனின் மேல் பகுதியில் சுரேஷ், சதீஷ்குமார், மணிகண்டன், பாண்டீஸ்வரன், பாலமுருகன், அருண், விவேக் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். வேனை பழனிசாமி(40) ஓட்டி வந்தார். அவர் அருகில் பவுன்ராஜ் (25), அரவிந்த் (22) ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

போராட்டம்

அந்த வேன் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் அவினாசி அருகே புதுப் பாளையம் பிரிவில்வந்தபோது வேனின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டில் கவிழ்ந்தது. இதில் சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போகும் வழியில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுரேசின் உடல் அவினாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்த போது அவர்கள் அதை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அவர்கள் கூறுகையில் தேனி மாவட்டத்திலிருந்து இங்கு வந்து கடந்த 2 நாட்களாக நாங்கள் அனைவரும் சரிவர உணவுகூட கிடைக்காமல் காத்துக்கிடக்கிறாம். சுரேஷ் வேலை பார்த்த நிறுவன உரிமையாளர் இதுவரை என்ன ஏது என்றுகூட வந்து பார்க்காமல் உள்ளார். எனவே அவர் இங்கு வந்து பேசிய பிறகுதான் நாங்கள் உடலை பெறுவோம் என்று காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவலறிந்ததும் அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் அவினாசி அரசு மருத்துவமனைக்கு வந்து அவர்களிடம் சமசர பேச்சுவார்த்தை நடத்தி சுரேஷ் வேலை பார்த்த நிறவன உரிமையாளரை வரவழைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பின்னர் அவர்கள் வாக்குவாதத்தை கைவிட்டனர். மாணவர் உடலை வாங்க மறுத்து வாக்குவாதம் நடந்ததால் அவினாசி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story