விருத்தாசலம் அருகே கருப்பு கொடி ஏந்தி பொது மக்கள் போராட்டம்


விருத்தாசலம் அருகே கருப்பு கொடி ஏந்தி பொது மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2020 1:13 AM GMT (Updated: 30 Aug 2020 1:13 AM GMT)

விருத்தாசலம் அருகே கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம்,

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் சுரங்க விரிவாக்க பணிக்காக, கடந்த 2014-15-ம் ஆண்டு, மந்தாரக்குப்பம், கெங்கைகொண்டான், ஆட்டோ கேட், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் வசித்த மக்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி, ஆலடி அடுத்த பாலக்கொல்லை பகுதியில் குடியமர்த்தினர். இதில் 62 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 212 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம், இங்கு வசிக்கும் 169 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிப்பு கட்ட டோக்கன் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதில் முதல் கட்டமாக 150 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

போராட்டம்

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி துணை செயலாளர் குரு, விருத்தாசலம் தொகுதி செயலாளர் அகிலன் மற்றும் நிர்வாகிகளுடன் பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு அடுக்குமாடி குடியிப்பு வேண்டாம், தனித்தனியே வீடு கட்டித்தர வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story