தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்


தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 31 Aug 2020 1:13 AM GMT (Updated: 31 Aug 2020 1:13 AM GMT)

பள்ளிபாளையம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இளம்பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (வயது 28). ஆட்டோ, மினி டெம்போ வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ஆனந்தி (26) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மோகன்குமார் (7) என்ற மகனும், சித்திகா ஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் தொழில் விஷயமாக அடிக்கடி ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருவார்.

கடந்த சில வாரங்களாக ஆனந்தி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனுக்கு அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி செல்போனில் பேசக்கூடாது என்று அவரை கண்டித்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கல்லை போட்டு கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று தங்களை பிரித்து வைக்கும்படி மனு அளித்தனர். அங்கிருந்த போலீசார் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும் படி தெரிவித்தனர். இதனால் கணவன்-மனைவி 2 பேரும் வீட்டுக்கு திரும்பினர்.

ஆனால் ஆனந்தி வீட்டுக்குள் செல்லாமல் வெளியே அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அங்கு கிடந்த பாறாங்கல்லை எடுத்து ஆனந்தியின் தலையில் போட்டார். இதில் மண்டை உடைந்து, ரத்தம் வெளியேறியது. வலியால் அலறிய ஆனந்தி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

ஆனந்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனை பார்த்த மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மணிகண்டன் தனது மனைவி ஆனந்தியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆனந்தியின் தாய் கனகா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனை நேற்று இரவு கைது செய்தனர்.

Next Story