1½ வயது குழந்தை எரித்துக் கொலை; கொடூர தந்தை கைது குடும்ப தகராறில் பயங்கரம்


1½ வயது குழந்தை எரித்துக் கொலை; கொடூர தந்தை கைது குடும்ப தகராறில் பயங்கரம்
x
தினத்தந்தி 31 Aug 2020 1:17 AM GMT (Updated: 31 Aug 2020 1:17 AM GMT)

மண்டபம் அருகே குடும்ப தகராறில் மனைவி மீதான ஆத்திரத்தில் 1½ வயது ஆண் குழந்தையை எரித்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அக்காள்மடம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் மரியா ஆயிஷா (வயது 20). மீனவ குடும்பத்தைச் சேர்ந்த இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மண்டபம் அருகே வேதாளை ஊராட்சிக்குட்பட்ட குஞ்சார்வலசை கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் வேலை பார்த்து வரும் முனியசாமி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபினாஷ் என்ற 1½ வயது ஆண் குழந்தை உண்டு.

இந்த நிலையில் தனது தங்கையின் திருமணத்திற்காக மரியா ஆயிஷா தனது சொந்த ஊரான அக்காள்மடத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே குழந்தை அபினாஷை அழைத்துச் சென்றார். இந்த நிலையில் திருமண வீட்டில் இருந்த போது முனியசாமிக்கும், மரியா ஆயிஷாவிற்கும் தகராறு ஏற்பட்டது.

குடிபோதையில் தகராறு

அப்போது குடிபோதையில் இருந்த முனியசாமி மரியா ஆயிஷாவிடம் சண்டையிட்டு அவரை தாக்கி குழந்தை அபினாஷை தூக்கி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்து குஞ்சார்வலசைக்கு சென்று மரியா ஆயிஷா குழந்தையை பற்றி முனியசாமியிடம் கேட்டார்.

அப்போது குழந்தை ஒரு இடத்தில் பத்திரமாக இருப்பதாக கூறினார். இதில் சந்தேகமடைந்த மரியா ஆயிஷா, தனது கணவர் முனியசாமி, குழந்தை அபினாஷை தூக்கி சென்று விட்டதாகவும், அவனை மீட்டுத்தரும்படியும் பாம்பன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதைத் தொடர்ந்து பாம்பன் போலீசார், மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். போலீசார் முனியசாமியை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி தகவல்

அப்போது மனைவி மீதான ஆத்திரத்தில் குழந்தை அபினாஷை எரித்துக் கொன்று விட்டதாக அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் முனியசாமி தெரிவித்துள்ளார்.

மனைவியிடம் சண்டை போட்டு விட்டு குடிபோதையில் இருந்த முனியசாமி, தனது குழந்தை அபினாஷை தூக்கிக் கொண்டு மண்டபம் பஸ் நிறுத்தத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ரெயில் தண்டவாளம் வழியாக குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த முனியசாமி வேதாளை அருகே உள்ள காட்டுப்பகுதியில் வைத்து குழந்தையை தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளார்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

எரிந்து கிடந்த உடல்

இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு முனியசாமியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அங்கு முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்த குழந்தை அபினாஷின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பின்னர் முனியசாமியை போலீசார் கைது செய்தனர். குடும்ப தகராறில்தான் குழந்தையை கொலை செய்தாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மேலும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story