அனைத்து கடைகளும் மூடல்: முழு ஊரடங்கால் வேலூர் நகரம் வெறிச்சோடியது தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு


அனைத்து கடைகளும் மூடல்: முழு ஊரடங்கால் வேலூர் நகரம் வெறிச்சோடியது தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 31 Aug 2020 6:32 AM GMT (Updated: 31 Aug 2020 6:32 AM GMT)

வேலூர் மாநகராட்சி பகுதியில் முழு ஊரடங்கால் மருந்து கடைகளை தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேலூர்,

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க ஆகஸ்டு மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இந்த மாதம் (ஆகஸ்டு) கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதிகளில் மருந்து கடைகளை தவிர மளிகை, காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் முடப்பட்டிருந்தன. ஒருசில பெட்ரோல் பங்குகள் மட்டுமே இயங்கின.

மாநகராட்சி பகுதியில் டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. அதனால் சிகிச்சைக்காக வேலூருக்கு வந்து விடுதியில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் மற்றும் உணவிற்காக ஓட்டல்களை மட்டும் சார்ந்திருந்த நபர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற நபர்களுக்கு சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உணவு தயாரித்து அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று உணவு பொட்டலம் மற்றும் குடிநீர் வழங்கினார்கள்.

வெறிச்சோடிய சாலைகள்

வேலூர் அண்ணாசாலை, ஆரணி சாலை, ஆற்காடு சாலை, காட்பாடி சாலை, கிரீன்சர்க்கிள், மக்கான் சந்திப்பு, நேஷனல் சந்திப்பு, காமராஜர் சிலை சந்திப்பு, திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மைய சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

வேலூர்-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பம் சோதனைச் சாவடி வழியாக முழு ஊரடங்கு நாளிலும் வழக்கம் போன்று பல கார்கள் இ-பாஸ் பெற்று சென்றன. தமிழக-ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி வழியாக குறைந்தளவு வாகனங்களே சென்றதை காண முடிந்தது.

தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு

முழு ஊரடங்கை அமல்படுத்தவும், மோட்டார் சைக்கிள், கார்களில் தேவையின்றி சுற்றித்திரியும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகரின் முக்கிய பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் வாகனங்களில் ரோந்து சென்று சாலையோரம் நின்று கொண்டிருந்த பொதுமக்களை வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.

வாகனத் தணிக்கையின்போது தேவையின்றி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கை மீறி இயங்கிய மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story