காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறப்பு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Sep 2020 11:28 PM GMT (Updated: 1 Sep 2020 11:28 PM GMT)

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நோய்த்தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து கோவில் களும் மூடப்பட்டு பக்தர் களின் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் தமிழக அரசு தளர்வுகளை ஏற்படுத்தி நேற்று முதல் கோவில் களை திறக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உத்தரவு பிறப்பித்தது.

அதையொட்டி காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வாத்தியங்கள் முழங்க கோவில் திறக்கப்பட்டது. கோவில் முகப்பில் பக்தர்களுக்கு தானியங்கு கருவி மூலம் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டு கைகள் சுத்தம் செய்யப்பட்டு, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்ட்டனர்.

காமாட்சியம்மன் கோவில்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குமரகோட்டம் முருகன் கோவில், வரதராஜபெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவில், வழக்கறுத்தீஸ்வரர் கோவில், மணிகண்டீஸ்வரர் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டு சாமிக்கு விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவில் செயல் அலுவலர்கள் தியாகராஜன், குமரன், வெள்ளைச்சாமி, கோவில் மேலாளர்கள் சுரேஷ், சுதர்சனம், ரகு ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

குன்றத்தூர்

குன்றத்தூரில் உள்ள முருகன் கோவில் நுழைவு வாயிலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து அதன் பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கோவில் சுத்தம் செய்யப்பட்டது. 5 மாதங்களுக்கு பின்னர் கோவில் திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மாமல்லபுரம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் உள்ள புகழ் பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான நித்திய கல்யாண பெருமாள் கோவில் பக்தர்களின் தரிசனத்திற்கு நேற்று திறக்கப்பட்டது. ஏராளமான புது மண தம்பதிகளும் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

அச்சரப்பாக்கம்

அச்சரப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில் கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாலையில் ராகு கேது பெயர்ச்சி விழா நடந்தது.

மேல்மருவத்தூர்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் லட்சுமிபங்காரு அடிகளார் வழிகாட்டுதலின்படி துணைத்தலைவர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Next Story