இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்


இங்கிலாந்து, நெதர்லாந்தில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Sep 2020 12:27 AM GMT (Updated: 3 Sep 2020 12:27 AM GMT)

இங்கிலாந்து, நெதர்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.7 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்குப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னை, நாமக்கல் மற்றும் ஊட்டி ஆகிய ஊர் முகவரிகளுக்கு 3 பார்சல்கள் வந்தன.

இங்கிலாந்து நாட்டில் இருந்து ஊட்டிக்கு வந்த பார்சலில் குழந்தைகளுக்கான விளையாட்டு கவரிங் நகைகள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இந்த பார்சலில் சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடர் கடத்தப்பட்டு இருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும், நெதர்லாந்து நாட்டில் இருந்து சென்னை மற்றும் நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலில் போதை மாத்திரைகள் இருந்ததும் தெரியவந்தது.

ரூ.7 லட்சம் போதைபொருட்கள்

இதையடுத்து 3 பார்சல்களில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 215 போதை மாத்திரைகளும் மற்றும் 7 கிராம் போதை பவுடரையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். இதைத்தொடர்ந்து, சென்னை, ஊட்டி, நாமக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள முகவரிக்கு சென்று விசாரித்தபோது, அது போலியான முகவரி என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் போதை பொருள்களை கல்லூரி மாணவர்கள், வசதி படைத்த வாலிபர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story