திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு - எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய உத்தரவு


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு - எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய உத்தரவு
x
தினத்தந்தி 4 Sep 2020 3:52 PM GMT (Updated: 4 Sep 2020 3:52 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் தரிசனத்துக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்திற்காக கடந்த 1-ந் தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது கோவில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு வரிசையாக கூண்டுகள் அமைக்கப்பட்டும், சமூக இடைவேளி கடைபிடிக்க வளையங்கள் வரையப்பட்டுள்ளதையும் அமைச்சர் பார்வையிட்டார். மேலும் அவர் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு உள்ள தானியங்கி கை சுத்திகரிப்பு கருவியில் தனது கைகளை சுத்தம் செய்து உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டார்.

தொடர்ந்து கோவிலில் மேற்கொள்ளப்பட்டு உள்ள அனைத்து பணிகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டார். முன்னதாக அவர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் 10 வயதிற்கு கீழ், 65 வயதிற்கு மேல் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. சாமி தரிசனம் முடிந்தவுடன் பக்தர்கள் பே கோபுரம் வழியாக வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள உப சன்னதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள வழிவகை செய்ய கோவில் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவில் ராஜகோபுரம் அருகில் உயர் மின் கோபுர விளக்கு, மாட வீதியில் உள்ள மின் விளக்குகள் சரி வர எரிவது இல்லை என்று புகார்கள் வந்தது. அவற்றை உடனடியாக சரி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

கிரிவலப்பாதையில் ஓம் என ஒலிக்கும் ஒலி பெருக்கிகளின் வயரை குரங்குகள் சேதம் செய்து உள்ளது. அதனை சரி செய்ய கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவரும் அ.தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவில் இணை ஆணையர் ஞானசேகர், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜான்சிராணி, திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. செயலாளர் ஜெ.எஸ்.செல்வம், தென்மாத்தூர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலியபெருமாள், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நைனாக்கண்ணு, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story