தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; இளம்பெண் பலி 2 பேர் படுகாயம்


தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; இளம்பெண் பலி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Sep 2020 5:59 PM GMT (Updated: 4 Sep 2020 5:59 PM GMT)

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தேவர்புரம் 7-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அந்தோணி மேரி கலிஸ்டா (வயது 21). இவரது தங்கை கிளிட்டா (19). இவர்கள் 2 பேரும் தருவைகுளத்தில் உள்ள மற்றொரு சகோதரியை பார்த்துவிட்டு தூத்துக்குடிக்கு திரும்பினர். அவர்கள், உறவினரான சண்முகபுரத்தைச் சேர்ந்த மாடசாமி (40) என்பவரது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி உள்ளனர்.

அவர்கள் தாளமுத்துநகர் பகுதியில் மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே வரும் போது, பஞ்சராகி நின்று கொண்டிருந்த ஒரு லாரியை முந்தி சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தூத்துக்குடியில் இருந்து குளத்தூர் நோக்கிச் சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இளம்பெண் பலி

இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி மேரி கலிஸ்டா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாடசாமி மற்றும் கிளிட்டா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story