உடுமலை அருகே துணிகரம்: கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து தம்பதியை கட்டிப்போட்டு 38 பவுன்நகை, ரூ.1½ லட்சம் கொள்ளை - முகமூடி ஆசாமிகள் 3 பேர் அட்டகாசம்


உடுமலை அருகே துணிகரம்: கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து தம்பதியை கட்டிப்போட்டு 38 பவுன்நகை, ரூ.1½ லட்சம் கொள்ளை - முகமூடி ஆசாமிகள் 3 பேர் அட்டகாசம்
x
தினத்தந்தி 6 Sep 2020 10:05 AM GMT (Updated: 6 Sep 2020 10:05 AM GMT)

உடுமலை அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தம்பதியை கட்டிப்போட்டு 38 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை முகமூடி அணிந்த 3 ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள போடிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 70). தமிழ்நாடு மின்சார வாரியம் கோவை மாவட்டம் நெகமத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி லட்சுமிபிரபா(63). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் சிங்கப்பூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இதனால் ராஜகோபால், அவருடைய மனைவி லட்சுமிபிரபா மட்டும் வீட்டில் குடியிருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, ராஜகோபால் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் லட்சுமிபிரபாவும் தூங்கினார்கள். அதை தொடர்ந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு ராஜகோபால் வீட்டிற்கு 30 வயது மதிக்கத்தக்க 3 ஆசாமிகள் வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பக்க கதவை கம்பியை கொண்டு நெம்பி உடைத்து, வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு அந்த ஆசாமிகள் முதலில் லட்சுமிபிரபா தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்றனர். அப்போது வீட்டில் ஏதோ சத்தம் கேட்கிறதே? என்று லட்சுமிபிரபா எழுந்தபோது, அங்கு முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் நிற்பதை கண்டு திடுக்கிட்டார். உடனே கொள்ளையர்கள் அவரை சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர், அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றி தரும்படி கேட்டுள்ளனர். இதனால் பயந்து போன லட்சுமிபிரபா, தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுத்துள்ளார்.

பின்னர் கொள்ளையர்கள், அந்த அறையில் இருந்த துணியை எடுத்து லட்சுமிபிரபாவின் கைகளை பின்பக்கமாக கட்டியுள்ளனர். பின்பு ராஜகோபால் இருந்த அறைக்கு சென்ற கொள்ளையர்கள் அவரை மிரட்டி அவரது கைகள் மற்றும் கால்களை துணியால் பின்பக்கமாக கட்டிவிட்டு, வாயில் துணியை வைத்து திணித்து, பணம், நகை எங்குள்ளது? என்று கேட்டு, கத்தியால் அவரை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு நெற்றி அருகே காயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் அவர் நகை, பணம் இருக்கும் பீரோவை காட்டினார். உடனே கொள்ளையர்கள் பீரோவை திறந்து அங்கிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் நகைகளை எடுத்துள்ளனர். அதன்படி மொத்தம் 38 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்துடன் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். கொள்ளையர்கள் சென்ற பிறகு, லட்சுமிபிரபா படுக்கை அறையில் இருந்து ராஜகோபால் படுத்து இருந்த அறைக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஒருவருக்கொருவர் கட்டுகளை அவிழ்த்து கொண்டு உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயராம், போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி, ஆனந்த கிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜகோபாலிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டின் கதவு உள்ளிட்ட இடங்களில் பதிவாகியிருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர் சுப்பிரமணியம் சேகரித்தார். போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலும் உடுமலைக்கு விரைந்து வந்து சம்பவம் நடந்த வீடு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை பார்வையிட்டார்.

பின்னர் திருப்பூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் ராஜகோபால் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து வீட்டை சுற்றி வந்து பின்னர் தளி சாலைக்கு சென்று காட்டிற்குள் 1½ கி.மீ.தூரம் ஓடிச்சென்று திரும்பியது.

இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காயம் அடைந்த ராஜகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முகமூடி அணிந்து வந்த அந்த 3 கொள்ளையர்கள் ஆங்கிலத்தில் பேசி உள்ளனர். ஆனால் அவர்கள் பேசிய ஆங்கிலம் சரளமாக பேசக்கூடிய ஆங்கில உச்சரிப்பு இல்லை என்றும், அத்துடன் அவர்களுக்குள் பேசும்போது இந்தி மொழியும் கலந்து உள்ளது. கொள்ளையர்கள் அவசரப்படாமல் நிதானமாக பீரோவில் இருந்த துணிகளை கலைத்து கொள்ளையடித்துள்ளனர். அதாவது அதிகாலை 2 மணி முதல் 4½ மணி வரை கொள்ளையர்கள் நிதானமாக கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Next Story