நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களை சுத்தம் செய்த ராணுவ வீரர்கள் பொதுமக்கள் பாராட்டு


நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களை சுத்தம் செய்த ராணுவ வீரர்கள் பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 6 Sep 2020 10:15 AM GMT (Updated: 6 Sep 2020 10:15 AM GMT)

நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களை ராணுவ வீரர்கள் சுத்தம் செய்தனர். இதை பொதுமக்கள் பாராட்டினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் கூட்டமைப்பான ஜவான்ஸ் சார்பில் பல்வேறு சமூக பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது பஸ் நிறுத்தங்களை சுத்தம் செய்தல், ரத்த தானம் வழங்குதல், பேரிடர் காலங்களில் போலீசாருடன் இணைந்து பணியாற்றுதல் மற்றும் மக்களுக்கு உதவி செய்தல் போன்ற பல பணிகளை ஜவான்ஸ் அமைப்பு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜவான்ஸ் அமைப்பு சார்பில் நாகர்கோவில் இடலாக்குடியில் 2 பஸ் நிறுத்தங்களை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. இதில் ராணுவ வீரர்கள் ஒன்று போல உடை அணிந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். பஸ் நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மற்றும் விளம்பர தாள்களை கிழித்து அப்புறப்படுத்தினர். பின்னர் தண்ணீர் ஊற்றி அவற்றை சுத்தம் செய்தனர்.

இதே போல அங்குள்ள ஒரு பூங்கா மற்றும் பழமையான கல் மண்டபத்தை சுத்தம் செய்யும் பணியும் நடந்தது. இதைத் தொடர்ந்து இடலாக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் ராணுவ வீரர்களை அவர் பாராட்டினார். பின்னர் பூங்காவிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் ராணுவ வீரர்கள் திரளாக கலந்துகொண்டு பணி செய்தனர். அவர்களுடைய பணியை பொதுமக்கள் பாராட்டினர்.

இதேபோல் ஜவான்ஸ் அமைப்பினருடன் சேர்ந்து மாவட்ட பா.ஜனதா பொருளாளர் முத்துராமனும் மரக்கன்றுகள் நட்டார்.

Next Story