பிரச்சினைகளை திசை திருப்பாதீர்கள் முதல்-அமைச்சருக்கு, கவர்னர் கிரண்பெடி பதில்


பிரச்சினைகளை திசை திருப்பாதீர்கள் முதல்-அமைச்சருக்கு, கவர்னர் கிரண்பெடி பதில்
x
தினத்தந்தி 6 Sep 2020 9:19 PM GMT (Updated: 6 Sep 2020 9:19 PM GMT)

பிரச்சினைகளை திசை திருப்பாதீர்கள், மத்தியக்குழு உதவியை பயன்படுத்தி கொரோனா விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் என்று முதல்-அமைச்சருக்கு கிரண்பெடி பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பெடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில் அமைச்சர்களுக்கு தெரியாமல் கோப்புகளை கேட்டும் பழக்கத்தை நிறுத்துங்கள் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு, கவர்னர் கிரண்பெடி நேற்று பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் அனைவரும் மிக அழுத்தம் தரக்கூடிய காலத்தில் இருக்கிறோம். இந்தநிலை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் முன்னுரிமை தரவேண்டிய விஷயம் எதுஎன்பதில் சரியான தேர்வு தேவை.

இந்த நேரத்தில் குற்றச்சாட்டுகளை வெளியிடுவதும், பொய் பரப்புவதும் மக்களை குணமாக்க போவதில்லை. ஆனால் அவை அதிகமானவர்களை காயப்படுத்துகிறது. நீங்கள் சொல்லும், குற்றச்சாட்டு அனைத்தையும் என்னால் மறுக்க முடியும். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. தயவுசெய்து கொரோனா விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். கொரோனா சவாலை எதிர்கொள்ள மத்திய அரசு தந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) குழுவின் முழு உதவியை பெறுங்கள்.

பிரச்சினைகளை திசைதிருப்பாதீர்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எங்கு நடக்கிறது என்று நான் உங்களுக்கு கேள்வி எழுப்புகிறேன். அதுதொடர்பான விஷயம் ஏதுவும் கவர்னர் மாளிகையில் நிலுவையில் இல்லை. ஆனால் அவர்கள் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள். அதேபோல் மீனவர் விவகாரத்திலும் எவ்விஷயமும் கவர்னர் மாளிகையில் கோப்புகள் நிலுவையில் இல்லாதபோதும் அவர்கள் இங்கு போராட்டம் நடத்துகிறார்கள். அதேபோல் பட்ஜெட் அதிகாரி யாரால் அச்சுறுத்தப்பட்டார் என்று கேள்வி எழுப்புகிறேன். இதேபோல் வேறு பல விஷயங்களும் உள்ளன. தயவு செய்து பிரச்சினைகளை திசைதிருப்பாதீர்கள்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Next Story