திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Sep 2020 11:33 PM GMT (Updated: 6 Sep 2020 11:33 PM GMT)

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சவுந்தரராஜன் (வயது 18).

நேற்று முன்தினம் சவுந்தரராஜன் வேலையின் காரணமாக திருவள்ளூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே வந்து கொண்டிருந்தபோது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட சவுந்தரராஜன் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த டிரைவர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சவுந்தரராஜன் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து அன்பழகன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி விசாரித்து வருகின்றனர்.

Next Story