ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்தால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 102 விமான சேவை


ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்தால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 102 விமான சேவை
x
தினத்தந்தி 6 Sep 2020 11:52 PM GMT (Updated: 6 Sep 2020 11:52 PM GMT)

ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று 102 விமான சேவைகளில் 11 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த மே மாதம் 25-ந்தேதி முதல் பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டது. அப்போது 25-க்குள் விமான சேவையை செயல்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்பிறகு கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய விமான பயணிகளுக்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ததுடன், விமான பயணிகளுக்கும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.

இதனால் கடந்த 1-ந் தேதி முதல் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கையும், விமான சேவைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றன. கடந்த வாரம் வரை வருகை, புறப்பாடு சேர்த்து 76 விமானங்கள் இயக்கப்பட்டு சுமார் 6 ஆயிரம் பேர் பயணித்தனர்.

102 விமான சேவை

கடந்த 1-ந் தேதியில் இருந்து பயணிகள் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து, விமானங்களின் எண்ணிக்கையும் 87 ஆக உயர்ந்தது. தற்போது பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது.

கடந்த 2 மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி கிடந்தது. ஆனால் தமிழக அரசின் தளர்வு நடவடிக்கையால் ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற நகரங்களுக்கு சென்ற 51 விமானங்களில் 4,469 பேரும், பிறநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 51 விமானங்களில் 6,628 பேரும் என ஒரே நாளில் 11 ஆயிரத்து 97 பேர் பயணித்தனர்.

சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் பயணிகளைவிட வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளன.

Next Story