விழுப்புரம் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்


விழுப்புரம் மாவட்டத்தில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
x
தினத்தந்தி 9 Sep 2020 1:43 AM GMT (Updated: 9 Sep 2020 1:43 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களான வா.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆல்பிரட் பெஞ்சமின், திண்டிவனம் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி தொடக்கப்பள்ளி தலை மை ஆசிரியர் வளர்மதி, கீழ்கூத்தப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலை மை ஆசிரியர் ரவி, பெரியமுதலியார்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் அருள், செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஹேமலதா, கெடார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சக்கீனாபீபி, திண்டிவனம் புனித அன்னாள் நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அகிலா, ஜி.அரியூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் இளமுருகன் ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகை ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். அதனை தொடர்ந்து 2017-18-ம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிகளான திருவெண்ணெய்நல்லூர் அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொடுக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு அதன் தலைமை ஆசிரியர்களிடம் சுழற்கேடயத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். மேலும் 2019-20-ம் கல்வியாண்டில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையேயான கற்றல் கற்பித்தல் தொடர்பான புதிய யுக்திகளை உரிய இணையதளத்தில் அதிகளவில் பதிவேற்றம் செய்ததற்காக அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலைவாணனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., மாவட்ட கல்வி அலுவலர்கள் விழுப்புரம் கிருஷ்ணன், திண்டிவனம் சாந்தி, செஞ்சி சுப்புராயன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சேவியர்சந்திரகுமார், காளிதாஸ், அலுவலக கண்காணிப்பாளர் கோகுலகண்ணன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story