நடிகை கங்கனா போதை பொருளை பயன்படுத்தினாரா? விசாரணை நடத்த போலீசாருக்கு அரசு உத்தரவு


நடிகை கங்கனா போதை பொருளை பயன்படுத்தினாரா? விசாரணை நடத்த போலீசாருக்கு அரசு உத்தரவு
x
தினத்தந்தி 12 Sep 2020 9:35 PM GMT (Updated: 12 Sep 2020 9:35 PM GMT)

நடிகை கங்கனா தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

நடிகை கங்கனா ரணாவத் சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக கூறினார். இதையடுத்து அவருக்கும், மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கும் வார்த்தை போர் வெடித்தது. இதையடுத்து பாந்திரா பாலிஹில்லில் உள்ள நடிகையின் பங்களாவில் சட்டவிரோத புதுப்பிப்பு பணிகள் நடந்ததாக கூறி மும்பை மாநகராட்சி அதை இடித்து தள்ளியது. இதனால் மோதல் மேலும் முற்றியது. நடிகை கங்கனா முதல்-மந்திரி தாக்கரேயை அவரது டுவிட்டர் பக்கத்தில் தரக்குறைவாக விமர்சித்தார்.

விசாரணை நடத்த உத்தரவு

இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகை கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கங்கனா தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.

நடிகை கங்கனாவுடன், ஆத்யாயன் என்ற நடிகர் உறவில் இருந்தார். அந்த நடிகர் அளித்த பேட்டி ஒன்றில், கங்கனா தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தினார் எனவும், தன்னையும் போதை பொருளை பயன்படுத்த வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை வைத்து தான் கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

Next Story