‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 13 Sep 2020 5:37 PM GMT (Updated: 13 Sep 2020 5:37 PM GMT)

‘நீட்‘ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அ.தி.மு.க. உறுதியாக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜெயலலிதா பேரவை உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், சின்னப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சி.செல்வக்குமாரிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, வினோபாஜி, அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா, கோவில்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் கஸ்தூரி சுப்புராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

விளாத்திகுளத்தை தலைமையிடமாக கொண்டு புதிய கோட்டம் உருவாக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். கிராம நிர்வாக அலுவலர் காலி பணியிடங்கள் தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. அமைப்பிடம் பட்டியல் வழங்கி உள்ளோம்.

தற்போது கொரோனா காலம் என்பதால், தேர்வுகள் எதுவும் நடைபெறவில்லை. மிக விரைவில் தேர்வுகள் நடைபெற்று அனைத்து இடங்களும் பூர்த்தி செய்யப்படும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு

தேர்வு என்பது வாழ்க்கையில் ஒரு அங்கம்தான். வாழ்க்கையே நீட் தேர்வுதான் என்று மாணவர்கள் அச்சம் கொள்ளக் கூடாது. வாழ்க்கையில் நாம் நம்பிக்கையை கையில் எடுத்தால், வெற்றி நம் கண் முன்னே இருக்கும். இந்த உயிர் தாய்-தந்தையால் நமக்கு கொடுக்கப்பட்ட கொடை. இதை மாய்த்துக்கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது.

நீட் தேர்வுக்கு பயந்து மதுரை மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது போன்ற துயர சம்பவம் இனியும் தமிழகத்தில் நடைபெறக் கூடாது என இறைவனை வேண்டுகிறேன். தற்போது இந்தியா முழுவதும் ஒரு தகுதி தேர்வு தேவையா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

சாமானிய மக்கள், ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்னும் வெளியே வரவேண்டியது உள்ளது. சமுதாயம், பொருளாதார ரீதியில் நாங்கள் அவர்களை முன்னெடுத்து செல்ல வேண்டியது இருக்கிறது. அவர்களுக்கு சமநீதியான வாய்ப்பு கொடுக்க வேண்டியது உள்ளது. எனவே இதுபோன்ற தகுதி தேர்வுகளை எதிர்கொள்ள எங்களுக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் அ.தி.மு.க. உறுதியுடன் உள்ளது.

பருவமழை முன்னெச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மீட்பு நடவடிக்கைகளோடு, பருவமழைக்காலத்தையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கயத்தாறில் தாலுகா அலுவலகத்தில் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினார்கள். பின்னர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, குறைகள் கேட்டறிந்தனர். தொடர்ந்து அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார்.

அப்போது, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை அமைப்பாளர்கள் ஆசூர் காளிப்பாண்டியன், முருகன், மாவட்ட கவுன்சிலர் ப்ரியா குருராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கண்ணன், மாவட்ட சிறுபான்மைப்பிரிவு இணை செயலாளர் பிரான்சிஸ், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சின்னத்துரை, இளைஞர் அணி செயலாளர்கள் அய்யனார்ஊத்து சுப்பையா, ஆசூர் சுடலைக்கண்ணு, தாசில்தார் பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.

Next Story