கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க எடியூரப்பா 17-ந் தேதி டெல்லி பயணம்


கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க எடியூரப்பா 17-ந் தேதி டெல்லி பயணம்
x
தினத்தந்தி 13 Sep 2020 10:15 PM GMT (Updated: 13 Sep 2020 10:15 PM GMT)

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 17-ந் தேதி டெல்லி செல்கிறார். இந்த பயணத்தின் போது மத்திய மந்திரிகளை சந்தித்து மழை நிவாரண நிதி கேட்கவும் அவர் முடிவு செய்திருக்கிறார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள் மந்திரி பதவி வழங்கும்படி முதல்-மந்திரி எடியூரப்பாவை வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய எடியூரப்பா முடிவு செய்துள்ளார். கடந்த மாதமே (ஆகஸ்டு) மந்திரிசபையை விரிவாக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் மழை பாதிப்பு, கொரோனா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் முதல்-மந்திரி எடியூரப்பாவின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.

அதுபோல, எடியூரப்பாவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததால், அவரால் டெல்லிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், வருகிற 21-ந் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற உள்ளது. இதனால் சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருக்கிறார்.

17-ந் தேதி டெல்லி பயணம்

இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா வருகிற 17-ந் தேதி டெல்லி புறப்பட்டு செல்ல முடிவு செய்திருக்கிறார். இந்த பயணம் 3 நாட்கள் கொண்டதாக இருக்கும் என்று முதல்-மந்திரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா?, அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

மந்திரிசபையில் தற்போது 6 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 5 இடங்கள் சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக நிரப்பப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது வேறு கட்சிகளில் இருந்து வந்து தற்போது எம்.எல்.சி.க்களாக உள்ள 3 பேருக்கும், மூல பா.ஜனதாவை சேர்ந்த 2 பேருக்கும் மந்திரி பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதற்காக, 5 பேரின் பெயர் பட்டியலை எடியூரப்பா தயாரித்து வைத்திருப்பதாக தெரிகிறது.

மேலிட தலைவர்கள் முடிவு

குறிப்பாக எம்.டி.பி.நாகராஜ், ஆர்.சங்கர், சி.பி. யோகேஷ்வர், உமேஷ்ஹட்டி, விஸ்வநாத் அல்லது வேறு ஒருவருக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பா.ஜனதா தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் போது தன்னிடம் உள்ள பட்டியலை கொடுத்து, அதற்கு அனுமதி பெற எடியூரப்பா முடிவு செய்திருக்கிறார். ஆனால் மந்திரிசபை விரிவாக்கத்தின் போது பா.ஜனதா மேலிட தலைவர்கள் யாருக்கு மந்திரி பதவி வழங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்தும் கட்சி மேலிட தலைவர்களுடன், எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் மந்திரி பதவியில் சரியாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் அவர் முடிவு செய்திருக்கிறார். பா.ஜனதா மேலிட தலைவர்கள் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய மட்டும் அனுமதி அளித்தால், 4 முதல் 5 பேருக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டால், யார் நீக்கப்படுவார்கள், புதிதாக யாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

மத்திய மந்திரிகளையும்...

முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி பயணத்தின் போது சில மத்திய மந்திரிகளை சந்தித்து பேசவும் முடிவு செய்திருக்கிறார். கர்நாடகத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் மழை பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிவாரண நிதி வழங்கும்படி மத்திய மந்திரிகளை சந்தித்து பேச இருக்கிறார்.

முதல்-மந்திரி எடியூரப்பாவின் டெல்லி பயணத்தின் போது, அவருடன் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மையும் உடன் செல்ல உள்ளார்.

Next Story