தடையை மீறி கடை திறக்க முயன்ற சண்டே மார்க்கெட் வியாபாரிகள் 32 பேர் கைது


தடையை மீறி கடை திறக்க முயன்ற சண்டே மார்க்கெட் வியாபாரிகள் 32 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sep 2020 10:45 PM GMT (Updated: 13 Sep 2020 10:45 PM GMT)

தடையை மீறி கடைகளை திறக்க முயற்சி செய்த சண்டே மார்க்கெட் வியாபாரிகள் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதன்பின் பல்வேறு தளர்வுகள் அளித்தாலும் புதுவை காந்திவீதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் செயல்படும் சண்டே மார்க்கெட்டில் கடைகள் போட அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.

இதற்கிடையே கடைகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சண்டே மார்க்கெட் வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைக்காக ஏ.ஐ.டி.யு.சி. சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று காலை காந்தி வீதியில் உள்ள அமுதசுரபி அருகில் கடைகள் போட்டு நூதனமாக போராட்டம் நடத்தப்பட்டது.

ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் சண்டே மார்க்கெட்டில் வழக்கம்போல் கடைகளை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

32 பேர் கைது

இது பற்றி தகவல் அறிந்து பெரியகடை, ஒதியஞ்சாலை போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெரிய கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்து வரும் நிலையில் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து வியாபாரம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு மட்டும் அரசு அனுமதி மறுப்பது ஏன்? எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை திறக்க முயற்சி செய்தனர். இதனால் வேறு வழியின்றி 6 பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story