சேலம் மாவட்டத்தில் 30 மையங்களில் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு; 13,370 பேர் எழுதினர்


சேலம் மாவட்டத்தில் 30 மையங்களில் கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு; 13,370 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 13 Sep 2020 10:15 PM GMT (Updated: 14 Sep 2020 3:15 AM GMT)

சேலம் மாவட்டத்தில் 30 மையங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் நுழைவு தேர்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 13 ஆயிரத்து 370 பேர் தேர்வு எழுதினார்கள்.

சேலம்,

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்த 15 ஆயிரத்து 318 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சேலம் மாநகரில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி, அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, சின்ன திருப்பதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி உள்பட 10 மையங்களில் இந்த நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. இதையொட்டி தேர்வு எழுத வந்திருந்த மாணவ, மாணவிகள் காலை 10 மணிக்கே தங்களது பெற்றோர்களுடன் தேர்வு மையங்களுக்கு முன்பு திரண்டனர்.

தொடர்ந்து காலை 11.30 மணி அளவில் தேர்வு மையங்களுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதாவது முக கவசம் மற்றும் கையுறை அணிந்து இருக்க வேண்டும் என தேர்வு மைய அதிகாரிகள் அறிவித்தனர். சமூக இடைவெளியுடன் 2 மீட்டர் கொண்ட வட்டத்தில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு கைகளில் கிருமி நாசினி தெளித்து தீவிர பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தேர்வு அறைகளில் 24 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒரு அறைக்கு 12 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் 1,948 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 13 ஆயிரத்து 370 பேர் தேர்வு எழுதினார்கள்.

அரசால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, 12-ம் வகுப்பு தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால்டிக்கெட், பாஸ்போர்ட், ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அவைகள் அசல் அடையாள அட்டையாக இருக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர, அரைக்கை சட்டை அணிந்து வர வேண்டும், ஷூ, சாக்ஸ் அணியக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அனைத்தும் தேர்வு மையங்களில் கடைபிடிக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து சரியாக 2 மணியளவில் நீட் நுழைவுதேர்வு தொடங்கி மாலை 5 மணியளவில் முடிவடைந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேசமயம் சேலம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. புறநகர் பகுதிகளான ஆத்தூர், மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்ததால், அங்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

சேலம் சூரமங்கலம் சோனா கல்லூரி தேர்வு மையத்தில் சுமார் 800 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதால் அங்கு காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் வெளியில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

சேலத்தில் நீட் தேர்வு எழுத தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவர்களுக்கு அவர்களது தேர்வு மையம் எங்கு உள்ளது? உணவு தேவையா? முக கவசம், சானிடைசர் வழங்கி தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகளின் இந்த உதவியை பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story