தூத்துக்குடியில் பயங்கரம்: தொழிலாளி சரமாரி குத்திக்கொலை - 3 பேர் கைது


தூத்துக்குடியில் பயங்கரம்: தொழிலாளி சரமாரி குத்திக்கொலை - 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2020 11:00 PM GMT (Updated: 14 Sep 2020 6:30 PM GMT)

தூத்துக்குடியில் தொழிலாளி சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், பாரதி நகரை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகன் கபில் என்ற கபில்தேவ் (வயது 27). கூலித்தொழிலாளி. இவருடைய நண்பர்களான சாம்சன் இம்மானுவேல் மற்றும் திரேஸ்புரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் முகுந்தன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றனர்.

அப்போது அங்கு வந்த தாளமுத்துநகர் கோயில் பிள்ளைவிளையை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜவேல் என்ற இஸ்ரவேல் (29) என்பவருக்கும், சாம்சன் இம்மானுவேல், முகுந்தன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கு இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சாம்சன் இம்மானுவேல் தனது நண்பர் கபில்தேவிடம் கூறி உள்ளார். இதனால் அவர் ராஜவேலுவை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார். அப்போது ராஜவேல், மீன்பிடி துறைமுகத்துக்கு வருமாறு அவரை அழைத்து உள்ளார். இதைத்தொடர்ந்து கபில்தேவ், சாம்சன் இம்மானுவேலுவை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ராஜவேலுவை பார்ப்பதற்காக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்கு சென்று உள்ளார்.

அங்கு மீன் ஏலக்கூடம் அருகே நின்று கொண்டிருந்த ராஜவேலிடம், தனது நண்பரிடம் தகராறு செய்தது குறித்து கபில்தேவ் கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் சேர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் கபில்தேவை சரமாரியாக வெட்டியும், குத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதில் பலத்த காயமடைந்த கபில்தேவை, அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கபில்தேவ் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த பயங்கர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜவேல், பூபாலராயர்புரத்தை சேர்ந்த விஜயபிரகாஷ் (23), மேல அலங்காரத்தட்டு பகுதியை சேர்ந்த சாம் டேனியல்ராஜ் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். கபில்தேவ் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story