களியக்காவிளை காய்கறி சந்தையில் வரி வசூலிப்பதில் மோதல் போலீஸ் நிலையம் முற்றுகையால் பரபரப்பு


களியக்காவிளை காய்கறி சந்தையில் வரி வசூலிப்பதில் மோதல் போலீஸ் நிலையம் முற்றுகையால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Sep 2020 1:43 AM GMT (Updated: 15 Sep 2020 1:43 AM GMT)

களியக்காவிளை காய்கறி சந்தையில் தீர்வை வசூலிப்பதில் ஏற்பட்ட மோதலால் வியாபாரிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

களியக்காவிளை,

குமரி-கேரள எல்லையான களியக்காவிளையில் தினசரி காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இங்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் தினமும் வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காய்கறி சந்தைக்கு வியாபாரி ஒருவர் மினி லாரியில் வாழைக்குலைகளை ஏற்றி வந்தார். அப்போது, நிர்ணயித்த தீர்வையைவிட அதிக கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு வாழைக்குலை வியாபாரி அதிக கட்டணம் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். அப்போது, தீர்வை வசூலிப்பவருக்கும், வாழைக்குலை வியாபாரிக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால், அந்த வியாபாரி மினி லாரியை சந்தையின் முன்பகுதியில் நிறுத்தி விட்டு களியக்காவிளை போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்தநிலையில் அவரது வாகனத்தை சிலர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவருக்கு ஆதரவாக காய்கறி வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். மேலும், அவர்கள் காய்கறி விற்பனையில் ஈடுபடாமல் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீசார் சமாதானப்படுத்தினர். அதை ஏற்க மறுத்த வியாபாரிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிப்பதாக கூறி கலைந்து சென்றனர்.

இதற்கிடையே வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களில் இருந்து காய்கறிகளை இறக்க முடியவில்லை. இதனால், அந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இச்சம்பவத்தால் களியக்காவிளை சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story