எண்ணெய் குழாய் பதிக்கும் விவகாரம்: விவசாயிகளுடன் ஆர்.டி.ஓ. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி


எண்ணெய் குழாய் பதிக்கும் விவகாரம்: விவசாயிகளுடன் ஆர்.டி.ஓ. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
x
தினத்தந்தி 15 Sep 2020 2:12 AM GMT (Updated: 15 Sep 2020 2:12 AM GMT)

எண்ணெய் குழாய் பகுதிக்கும் விவகாரம் தொடர்பாக விவசாயிகள் கூட்டமைப்பினரிடம் ஆர்.டி.ஓ. நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

திருப்பூர்,

கோவை இருகூரில் இருந்து பெங்களூரு வரை பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த திட்டத்தை சாலையோரம் மாற்றுவழியில் செயல்படுத்த வலியுறுத்தி இன்று(செவ்வாய்க்கிழமை) பாரத் பெட்ரோலியத்தின் ஐ.டி.பி.எல். திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

இந்தநிலையில் விவசாயிகள் கூட்டமைப்பினருடன் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைதிப்பேச்சுவார்த்தை நேற்று காலை நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ.கவிதா தலைமை தாங்கினார். தெற்கு தாசில்தார் சுந்தரம், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீராமச்சந்திரன், ஐ.டி.பி.எல். திட்ட அதிகாரிகள், நிலம் எடுப்பு அதிகாரிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குமார், தி.மு.க. மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ரத்தினசாமி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், உழவர் உழைப்பாளர் கட்சி பொங்கலூர் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தெய்வசிகாமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அமைதிப்பேச்சுவார்த்தை

அமைதிப்பேச்சுவார்த்தைக்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அதிகாரிகள் தெரிவித்ததால் விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து அங்கேயே பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றனர். பின்னர் அனைவரையும் அலுவலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

விவசாயிகள் கூட்டமைப்பு தரப்பில் இந்த திட்டத்தை சாலையோரமாக மாற்று வழியில் செயல்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த திட்டத்துக்கான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

ஆர்.டி.ஓ. கவிதா பேசும்போது, கொரோனா காலமாக இருப்பதால் வயதானவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அனைவரின் நலன் கருதி இந்த போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதை விவசாயிகள் கூட்டமைப்பினர் ஏற்கவில்லை. இதன்காரணமாக அமைதிப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இன்று முதல் போராட்டம்

திட்டமிட்டபடி இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் கருங்காளிபாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து அங்கிருந்து விவசாயிகள் கூட்டமைப்பினர் புறப்பட்டனர்.

Next Story