அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் மனு


அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 Sep 2020 2:32 AM GMT (Updated: 17 Sep 2020 2:32 AM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டர் மலர்விழியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் முருகன், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ் மற்றும் ஊராட்சிமன்ற தலைவர்கள் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கலெக்டர் மலர்விழியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 19 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அந்தந்த பகுதி ஊராட்சி தலைவர்கள் பாடுபட்டு வருகிறோம். இதற்கு போதிய நிதிஆதாரம் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். 14 மற்றும் 15-வது நிதிக்குழு மானியத்திற்கான பணிகளுக்கு கிராம ஊராட்சி மன்றத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோருதல் மற்றும் நிர்வாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தலா ரூ.2 லட்சம்

கொரோனா பேரிடர் மேலாண்மை காலத்தில் ஊராட்சி மன்றங்கள் மூலமாக கொரோனா நோய் தொற்றை தடுக்க மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு உரிய செலவுக்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2020-2021-ம் ஆண்டிற்கான திட்டங்களுக்கு உரிய பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story