தஞ்சையில் பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிப்பு


தஞ்சையில் பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 18 Sep 2020 2:19 AM GMT (Updated: 18 Sep 2020 2:19 AM GMT)

தஞ்சையில், பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் நேற்று பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் குணசேகரன், மாநகர தலைவர் நரேந்திரன், செயலாளர் முருகேசன், மண்டல மகளிரணி தலைவி கலைச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் வெற்றிக்குமார், பேச்சாளர் பெரியார் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-காங்கிரஸ்

தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் முரசொலி, நகர துணை செயலாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கமலா ரவி, மருத்துவர் அணி செயலாளர் அஞ்சுகம் பூபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெரியார் சிலைக்கு மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் மாலை அணிவித்தார். இதில் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பிரபு மண்கொண்டார், இளைய பாரத், பூக்கடை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாநகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.வரதராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் வல்லம் குணசேகரன், பூக்கடை குணா, முன்னாள் கவுன்சிலர்கள் ஞானசீலன், ஆதிநாராயணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.-விடுதலை சிறுத்தைகள்

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையிலும், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலையிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி தலைமையிலும், தமிழ்தேசிய பாதுகாப்பு கழகம் சார்பில் வக்கீல் கார்த்திகேயன் தலைமையிலும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் பேராசிரியை வித்யா தலைமையிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Next Story