முதல்-அமைச்சர் நாளை மறுநாள் தூத்துக்குடி வருகை: விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு


முதல்-அமைச்சர் நாளை மறுநாள் தூத்துக்குடி வருகை: விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு
x
தினத்தந்தி 19 Sep 2020 11:15 PM GMT (Updated: 19 Sep 2020 7:07 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தூத்துக்குடி வருவதையொட்டி, விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பணிகளை ஆய்வு செய்கிறார். முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த முன்னேற்பாடு பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் அரங்கு, திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள், புகைப்பட கண்காட்சி அரங்கு அமைக்கப்படவுள்ள இடம் உள்ளிட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் பழனிசாமி வருகிற 22-ந்தேதி தூத்துக்குடி வருகிறார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் கடந்த 5 மாதங்களாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்-அமைச்சரே மாவட்டம் தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் களப்பணியாற்றி வரும் ஒரே முதல்-அமைச்சர் தமிழக முதல்-அமைச்சர் தான்.

அத்தோடு மட்டுமல்லாமல் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மாவட்டம் தோறும் வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல்வர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதன்மூலம் சிறந்த ஜனநாயக நடைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக நமது முதல்-அமைச்சர் விளங்குகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இறப்பு சதவீதம் தமிழகத்திலேயே குறைவாக தூத்துக்குடியில் தான் 0.67 சதவீதமாக உள்ளது. இறப்பு சதவீதத்தை குறைத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் தூத்துக்குடி வருகை, வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி 4-வது பைப் லைன் திட்டம், கோவில்பட்டி 2-வது பைப்லைன் திட்டம், உடன்குடி அனல்மின் நிலையம், ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நமது மாவட்டத்துக்கு கிடைத்துள்ளன. வருகிற 22-ந் தேதி மேலும் பல திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழகத்தில் இன்றும் அசைக்க முடியாத சக்தியாக அ.தி.மு.க. இருக்கிறது. 1.5 கோடிக்கு அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லா நிகழ்ச்சிகளையும் ஆன்லைனில் நடத்துகிறார். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக களப்பணி செய்து வருகிறார். அ.தி.மு.க.வின் சக்தியை ஸ்டாலினே உணர்ந்திருக்கிறார். திரையரங்குகளை திறக்க அனுமதி அளிப்பது தொடர்பாக நோய் தொற்றின் தாக்கத்தை பொறுத்து மத்திய அரசு மற்றும் மருத்துவக் குழுவினர் பரிந்துரைபடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சின்னப்பன், கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரோன் ஜீத்சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், அ.தி.மு.க. மாவட்ட இணைச் செயலாளர் செரினா சி.த.பாக்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story