திருமணம் செய்து வைக்காததால் அம்மிக்குழவியை தலையில் போட்டு விவசாயியை கொன்ற தம்பி கைது


திருமணம் செய்து வைக்காததால் அம்மிக்குழவியை தலையில் போட்டு விவசாயியை கொன்ற தம்பி கைது
x
தினத்தந்தி 20 Sep 2020 2:25 AM GMT (Updated: 20 Sep 2020 2:25 AM GMT)

பட்டுக்கோட்டை அருகே திருமணம் செய்து வைக்காததால் அம்மிக்குழவியை தலையில் போட்டு விவசாயியை கொன்ற அவரது தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செம்பாளூர் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம்(வயது 80). இவருடைய மகன்கள் இளங்கோ(56), பாலகுமார்(49), சண்முகம்(45). இவர்களில், இளங்கோ விவசாயம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இவருடைய தம்பிகள் பாலகுமார், சண்முகத்துக்கு திருமணமாகவில்லை. இதனால் இவர்கள் இருவரும் தங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது அண்ணன் இளங்கோவிடம் வற்புறுத்தி வந்தனர். இதனால் அண்ணன்-தம்பிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

அம்மிக்குழவியை தலையில் போட்டு கொலை

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தனக்கு திருமணம் செய்து வைக்காதது குறித்து பாலகுமார் தனது அண்ணன் இளங்கோவிடம் கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அண்ணன்-தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

அப்போது ஆத்திரம் அடைந்த பாலகுமார் அருகில் கிடந்த அம்மிக்குழவியை தூக்கி இளங்கோ தலையில் போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்த இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இது குறித்து இளங்கோ மனைவி மீனாகுமாரி, பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளங்கோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாலகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்த தம்பி, தனது அண்ணனை கொலை செய்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story