தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் வேளாண்மை அவசர சட்டங்களை கைவிட கோரிக்கை


தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் வேளாண்மை அவசர சட்டங்களை கைவிட கோரிக்கை
x
தினத்தந்தி 20 Sep 2020 2:31 AM GMT (Updated: 20 Sep 2020 2:31 AM GMT)

வேளாண்மை அவசர சட்டங்களை கைவிட கோரி தஞ்சையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்ட்-லெனினிஸ்டு) ஆகியவை சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் நீலமேகம், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகர செயலாளர் குருசாமி, மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரகுமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்ட்- லெனினிஸ்டு) மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

நிவாரணம்

ஆர்ப்பாட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்தியஅரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

கொரோனா காலத்தை பயன்படுத்தி மத்தியஅரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு கொள்கை, மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண்மை உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்கிவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் வேளாண்மை சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகிய சட்டங்களையும், கொள்கைகளையும் கைவிட வேண்டும்.

கடன் வசூல்

கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும். பேரூராட்சிகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். விவசாயத்திற்கான மானிய திட்டத்தை விவசாய தொழிலாளர்கள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

நுண்நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள் கடன் வசூலை ஓராண்டு காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். அனைத்து கடன்களுக்கும் ஓராண்டிற்கு வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வல்லம், பூதலூர்

இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வல்லம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, மாவட்டக்குழு உறுப்பினர் அபிமன்னன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வடக்கு பூதலூரில் ஒன்றிய துணை செயலாளர்கள் செந்தில்குமார், துரைராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் துரைசாமி, கணபதி சுந்தரம், கவுன்சிலர் லதா சுப்பிரமணியன், முகில் உள்பட பலர் பங்கேற்றனர். பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பூதலூர் தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story