கொரோனா நிவாரணம் வழங்க கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கொரோனா நிவாரணம் வழங்க கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2020 3:33 AM GMT (Updated: 20 Sep 2020 3:33 AM GMT)

கொரோனா நிவாரணம் வழங்க கோரி சேலம், எடப்பாடி, மேச்சேரியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி பரமசிவம், மோகனசுந்தரம், பிரவீன்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை நாட்கள் அதிகரித்திட வேண்டும், இத்திட்டத்தை பேருராட்சிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும், ரெயில்வே, நிலக்கரி, சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

எடப்பாடி, மேச்சேரி

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி எடப்பாடியில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தாலுகா செயலாளர் பெரியண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி, சி.ஐ.டி.யு. மாவட்ட துணை தலைவர் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மணிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜலகண்டாபுரம் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நங்கவள்ளி ஒன்றியசெயலாளரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவருமான பழ.ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய துணை செயலாளர்கள் சின்னத்தம்பி, கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் நிருபன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Next Story