புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம்


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 20 Sep 2020 3:35 AM GMT (Updated: 20 Sep 2020 3:35 AM GMT)

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்,

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 17-ந் தேதி புரட்டாசி மாதம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று புரட்டாசி முதலாவது சனிக்கிழமை என்பதால் சேலம் பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் காலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் மூலவர் பெருமாள், சுந்தரவல்லி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் துளசிமாலை அலங்காரத்திலும், கருட ஆழ்வார், ஆண்டாள் பூக்கள் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.

நீண்டவரிசை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவிலில் பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. அதேசமயம் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கும் பக்தர்கள் அன்னதானத்தை பொட்டலமாக பக்தர்களுக்கு வினியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோல் சேலம் அம்மாபேட்டை வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முக கவசம்

செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர்கோவில், பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், ஆனந்தா இறக்கம் பகுதில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி கோவில், பட்டை கோவில் என்று அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவில், சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், நாமமலை வரதராஜ பெருமாள் கோவில், குரங்குசாவடி கூசமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்ததை காணமுடிந்தது.

எடப்பாடி

எடப்பாடியில் உள்ள மூக்கரை பெருமாள் கோவில், வெல்லக்கரட்டு பெருமாள் கோவில், வெல்லுறுப்பெருமாள் கோவில், ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவில், பாலிபெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தலைவாசலை அடுத்த மணிவிழுந்தான் தெற்கு வரதராஜ பெருமாள் கோவில், ஆறகளூர் கரிவரதராஜ பெருமாள் கோவில், வீரகனூர் கஜ வரதராஜ பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து துளசி மாலை அணிவித்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கொப்புகொண்ட பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story