விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்


விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 22 Sep 2020 5:01 AM GMT (Updated: 22 Sep 2020 5:01 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நல்லசிவம், அஜய்தங்கம், இளங்கோவன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.

ஆலோசனை

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளை கேட்டறிந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டார். அதோடு குற்ற வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் எனவும், குற்றங்கள் நடைபெறாமல் எவ்வாறு பணிபுரிய வேண்டும் எனவும், பாலியல் சம்பந்தமான குற்றங்களை எவ்வாறு தடுப்பது எனவும் போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் அவர் கூறுகையில், சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் உடனே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும். அதுபோல் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புக்கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story