அணைகள், மறுகால் ஓடைகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் வேண்டுகோள்


அணைகள், மறுகால் ஓடைகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Sep 2020 3:55 AM GMT (Updated: 23 Sep 2020 3:55 AM GMT)

அணைகள், மறுகால் ஓடைகளில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.

தென்காசி,

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை நிரம்பி உள்ளது. ராமநதி, கடனா நதி அணைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. எனவே எந்த நேரத்திலும் மேற்படி அணைகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் அணைகளிலோ, அணைகளின் மறுகால் பகுதிகளிலோ குளிப்பதற்கு செல்ல வேண்டாம்.

மேலும் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடுவது குற்றமாகும். எனவே அணைகள், ஆறு, குளம், தனியார் தோட்டங்களில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம். மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுச்சூழல் சுகாதாரம்

பருவமழை காலத்தில் பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீட்டின் கூரைகள், சன் ஷேடுகள் ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும் வீட்டின் வெளிப்புறம் தேவையற்ற டப்பாக்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கவர்கள் இருப்பின் அவற்றில் நீர் தேங்கி கொசு வளர வாய்ப்பு உள்ளதால் அவற்றை உடனே அகற்றி விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காய்ச்சல் அறிகுறி

மேலும் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரையே பயன்படுத்துமாறும், தினசரி உப்பு கலந்த சுடுநீர் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பருவமழை காலத்தில் ஏற்படும் டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் கொரோனா ஆகிய அனைத்து நோய்களுக்கும் காய்ச்சல் ஒரு பொதுவான அறிகுறியாக இருப்பதால் பொதுமக்கள் எவருக்கேனும் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் சுய மருத்துவம் பார்க்காமல் உடனே அருகில் உள்ள பொது சுகாதார மையத்திற்கோ, அரசு மருத்துவமனைக்கோ சென்று பரிசோதனை மேற்கொண்டு சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story