குமரியில் மழை: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 4 வீடுகள் இடிந்தன


குமரியில் மழை: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு 4 வீடுகள் இடிந்தன
x
தினத்தந்தி 24 Sep 2020 6:16 AM GMT (Updated: 24 Sep 2020 6:16 AM GMT)

குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் 4 வீடுகள் இடிந்து விழுந்தன.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று பகலில் மழை பெய்தது.

இதனால் ஆறு மற்றும் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதே போல் அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பேச்சிப்பாறை அணை மூடல்

இதைத்தொடர்ந்து நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1709 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 33.90 அடியானது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், பேச்சிப்பாறை அணை நேற்று காலை மூடப்பட்டது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.

பெருஞ்சாணி அணைக்கு 1,974 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 70.90 அடியாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணையின் மொத்த கொள்ளளவு 77 அடியாகும். அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இதே போல் சிற்றார் 1 அணைக்கு 183 கன அடிநீரும், சிற்றார் 2 அணைக்கு 264 கனஅடி நீரும் வருகிறது. முக்கடல் அணை 19.2 அடியாகவும், சிற்றார் -1 11.91 அடியாகவும் உள்ளது.

குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இதைத்தொடர்ந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சப்பாத்து பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது. சப்பாத்து பாலத்தின் மீது வாகனங்கள் செல்லாமல் இருக்க அங்கு தடுப்பு அமைத்து உள்ளனர். திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நேற்று முன்தினம் பெய்த மழையால், 4 வீடுகள் இடிந்தன. அதாவது நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது வீடு மழைக்கு சேதமடைந்தது. இதேபோல் தோவாளை, குருந்தன்கோடு, விளவங்கோடு ஆகிய பகுதிகளில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன.

மழை அளவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக பாலமோரில் 61.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-

பூதப்பாண்டி- 15.2, சிற்றார் 1- 40, களியல்- 8.1, கன்னிமார்- 15.4, கொட்டாரம்- 7.2, குழித்துறை- 17.4, மயிலாடி- 9.2, நாகர்கோவில்- 18.8, பேச்சிப்பாறை- 21.4, புத்தன்அணை- 30.2, பெருஞ்சாணி- 31.4, சிற்றார் 2- 58, சுருளோடு- 21.6, தக்கலை- 12, குளச்சல்- 13.4, இரணியல்- 7.2, மாம்பழத்துறையாறு- 17.2, கோழிப்போர்விளை- 21, அடையாமடை- 21, குருந்தன்கோடு- 7.6, முள்ளங்கினாவிளை- 18, முக்கடல் அணை- 15.4 என மழை பதிவாகி இருந்தது.

Next Story