விழுப்புரம் அருகே சோகம்: கடன் தொல்லையால் தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை - மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை


விழுப்புரம் அருகே சோகம்: கடன் தொல்லையால் தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை - மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 24 Sep 2020 10:00 AM GMT (Updated: 24 Sep 2020 9:45 AM GMT)

விழுப்புரம் அருகே கடன் தொல்லையால் தாய்- மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். மற்றொரு மகள், தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம்,

விழுப்புரம் சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 43), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா(37). இவர்களுடைய மகள்கள் பவித்ரா (17), ஷர்மிளா (13).

இவர்களில் பவித்ரா விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பும், ஷர்மிளா அதே பள்ளியில் 7-ம் வகுப்பும் தற்போது படித்து முடித்துள்ளனர். கஜேந்திரன், தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

மேலும் கடந்த சில மாதங்களாக கஜேந்திரன் சரிவர வேலைக்கு செல்லாமலும், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமலும் இருந்து வந்ததால் கவிதா, குடும்பம் நடத்த முடியாமல் வறுமையில் வாடினார். இதனால் அவர், தனக்கு தெரிந்த சிலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த சூழலில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் கடன் தொல்லை அதிகமானதாலும், கணவர் பொறுப்பற்ற முறையில் மதுகுடித்து விட்டு வருவதாலும் கடந்த சில நாட்களாக கவிதா மனவேதனையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் கவிதாவுக்கும், அவரது கணவருக்கும் நேற்று முன்தினம் குடும்ப தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் கஜேந்திரன் வெளியே சென்று விட்டார். அப்போது மாலையில், கவிதா தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு காகுப்பம் அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்று வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகு நேரம் ஆகியும் அவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கவிதாவையும், அவரது மகள்களையும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவர்களை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையம் ரெயில்வே தண்டவாளம் அருகே கவிதா மற்றும் அவரது மகள்கள் பவித்ரா, ஷர்மிளா ஆகிய 3 பேரும் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர். இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதா உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரையும் டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் விஷம் குடித்திருப்பதும், இதில் கவிதாவும், அவரது மூத்த மகள் பவித்ராவும் ஏற்கனவே இறந்து விட்டதும் தெரியவந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஷர்மிளாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கஜேந்திரன் அடிக்கடி மது குடித்துவிட்டு குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் குடும்ப வறுமையின் காரணமாக கடன் வாங்கியதாலும், கடன் சுமை அதிகரித்ததால் 2 பெண் குழந்தைகளையும் எப்படி கரை சேர்க்கப்போகிறோம் என்று எண்ணி வாழ்க்கையில் வெறுப்படைந்த கவிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தான் இறந்து விட்டால் தனது 2 மகள்களும் அனாதையாகி விடுவார்களே எனக்கருதி அவர்களையும் தன்னுடனே அழைத்துச்செல்ல முடிவு செய்து கவிதா, தன்னுடைய 2 மகள்களுக்கும் விஷம் கொடுத்து குடிக்க வைத்து விட்டு, பின்னர் அதனை தானும் குடித்துள்ளது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை மற்றும் குடும்ப வறுமையின் காரணமாக தாய்- மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story