பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ கார் கண்ணாடி உடைப்பு


பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ கார் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 24 Sep 2020 10:48 PM GMT (Updated: 24 Sep 2020 10:48 PM GMT)

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவரும் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் காலாப்பட்டு அருகே தமிழகப் பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அங்கு நடந்து வரும் கட்டுமானப் பணியை பார்ப்பதற்காக நேற்று மதியம் காரில் சென்றார். காரை டிரைவர் சாலமன் ஓட்டிச் சென்றார்.

புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது திடீரென கல்வீசி தாக்கியதில் காரின் பின்பக்க கண்ணாடி பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த சாமிநாதன் காரை நிறுத்தி பார்த்தார். மர்ம நபர்கள் கல்வீசி தாக்கி விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து சாமிநாதன் எம்.எல்.ஏ. அதே காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இவர் இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் செய்யவில்லை.

இது குறித்து சாமிநாதன் எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது, “கோட்டக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்பக்க கண்ணாடியில் திடீரென ஒரு கல் வந்து விழுந்தது. இதில் கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடனே காரை நிறுத்தி பார்த்த போது அங்கு யாரையும் காணவில்லை. யாரோ கல்வீசி தாக்கி விட்டு தப்பியுள்ளனர். இதனை அரசியல் ஆக்க வேண்டாம் என்பதற்காக நான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யவில்லை”என்றார்.

Next Story