லாரி டிரைவரை கொன்ற கிளீனருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு


லாரி டிரைவரை கொன்ற கிளீனருக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 3:40 AM GMT (Updated: 25 Sep 2020 3:40 AM GMT)

ஊத்தங்கரை அருகே லாரி டிரைவரை கொலை செய்த வழக்கில் கிளீனருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கிருஷ்ணகிரி,

வேலூர் மாவட்டம் சாய்நாதபுரம் அருகே புருஷோத்தமன் தெருவை சேர்ந்தவர் அரிபிரசாத் (வயது 47). சொந்தமாக டாரஸ் லாரி வைத்துள்ளார். இவரது லாரியில் டிரைவராக திருவண்ணாமலை மாவட்டம் அடிஅண்ணாமலையை சேர்ந்த பன்னீர் (42) என்பவர் வேலை செய்தார். கிளீனராக வேலூர் மாவட்டம் உத்திரமாதா கோவில் பச்சையப்பன் தெருவை சேர்ந்த சந்துரு என்கிற சந்திரசேகர் (44) இருந்தார்.

இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி டாரஸ் லாரியில் சரக்கு ஏற்றி கொண்டு டிரைவர் பன்னீரும், கிளீனர் சந்துருவும் சென்றனர். அப்போது சந்துரு டிரைவர் பன்னீரிடம் வழியில் சரக்குகளை லாரியில் ஏற்றி செல்லலாம் என்றும் செலவுக்கு அந்த பணத்தை வைத்து கொள்ளலாம் எனவும் கூறினார்.

கிளீனருக்கு ஆயுள் தண்டனை

இதற்கு டிரைவர் பன்னீர் மறுத்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பன்னீர் தனது முதலாளி அரிபிரசாத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இந்த நிலையில் ஊத்தங்கரை அருகே கதவணி பிள்ளையார் கோவில் அருகே லாரி வந்தது. அந்த நேரம் தன்னை முதலாளியிடம் டிரைவர் பன்னீர் காட்டி கொடுத்து விட்டாரே என சந்துரு ஆத்திரத்தில் இருந்தார்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துரு, பன்னீரை சரமாரியாக குத்தினார். இதில் பன்னீர் இறந்தார். இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிளீனர் சந்துரு கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமாரி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சந்துரு என்கிற சந்திரசேகருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.

Next Story