புதிய கல்வி கொள்கையை கண்டித்து ஒடுக்கப்பட்டோர் கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


புதிய கல்வி கொள்கையை கண்டித்து ஒடுக்கப்பட்டோர் கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sep 2020 5:09 AM GMT (Updated: 25 Sep 2020 5:09 AM GMT)

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஒடுக்கப்பட்டோர் கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஒடுக்கப்பட்டோர் கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் முத்துச்சாமி தலைமை தாங்கினார். தமிழக சமூக நீதிக்கழக அமைப்பின் நிறுவன தலைவர் தங்கபாண்டியன், பொதுச்செயலாளர் சரவணவேல், ஆதித்தமிழர் பேரவையின் மேற்கு மாவட்ட செயலாளர் காளிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த அரசு அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வினோத், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவர் அரபுமுகமது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் ஜானகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் அருள்செல்வன் தலைமை தாங்கினார். பழனி நகர செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், தங்களது சட்டையில் கருப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Next Story