இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே வேளாண் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது அமைச்சர் பேட்டி


இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே வேளாண் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 27 Sep 2020 12:16 PM GMT (Updated: 27 Sep 2020 12:16 PM GMT)

இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே வேளாண் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே கீழக்காவாதுக்குடி பகுதியில் அம்மா நகரும் ரேஷன் கடை சேவையினை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் ஆனந்த், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், உதவி கலெக்டர் பாலசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர் செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் மணிகண்டன், பொது வினியோகத்திட்ட துணைப்பதிவாளர்கள் அப்துல்சலீம், சுபாஷினி, கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் சவுந்தர்ராஜன், கூட்டுறவு சங்க தலைவர் பாண்டியன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரேஷன் கடைகளின் செயல்பாட்டினை மேம்படுத்தி பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்களை பெற்றிடும் பொருட்டு தமிழக அரசு பகுதிநேர நியாய விலைக்கடைகளை தொடங்கி செயல்படுத்தி வருகின்றது. இருப்பினும், தொலைதூரங்களில் இருக்கும் குக்கிராமங்களில் சில நிர்வாக காரணங்களால் பகுதிநேர அங்காடிகள் திறந்திட வாய்ப்பு இல்லாததால் அப்பகுதிகளில் வாழும் மக்களின் இன்னல்களை களையும் பொருட்டு அம்மா நகரும் ரேஷன் கடைகள் என்ற திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்்.

125 அம்மா நகரும் ரேஷன் கடைகள்

அதன்படி திருவாரூர் அருகே கீழக்காவாதுக்குடியில் நகரும் ரேஷன் கடை சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை பெற்று செல்வதில் சிரமங்கள் உள்ள கிராமங்கள் கண்டறியப்பட்டு அந்த மக்களின் சிரமங்களை நிவர்த்தி செய்கின்ற வகையில் 125 அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்கள் நடத்திடும் 106 ரேஷன் கடைகளிலிருந்து 125 அம்மா நகரும் ரேஷன் கடை செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் 16,428 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை அவரவர் குடியிருப்பு அருகிலேயே பெற்று பயனடைய உள்ளார்கள். ரேஷன் கடைகளில் விற்பனை முனையை எந்திரம் வழங்கப்பட்டு எந்த பிரச்சினையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகளுக்கு உரியவர்கள் என்று இருந்தால் போதும் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு விடும். எந்திரம் செயல்படவில்லை. மின்சாரம் இல்லை எந்த காரணத்தை கொண்டும்் பொருட்கள் தடங்கல் இல்லாமல் வழங்கப்படும்.

எந்த பிரச்சினையும் வராது

புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை பொருத்தவரை தமிழகத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டம் தான். இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் இது. நம்முடைய மாநிலத்தில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு எந்த பிரச்சினையும் வராது. பிரச்சினை என்று சொன்னால் உடனடியாக தலையிட்டு அதற்கு தீர்வு காணக்கூடிய அரசு அ.தி.மு.க. அரசு.

கொரோனாவை வைத்து கொண்டு மிக பெரிய ஊழல் முறைகேட்டில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு பதில் அளிக்கையில், ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் கூற முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து பிரதமர் பாராட்டியுள்ளார். மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர், அவர் எதிரிகட்சி தலைவர் போல் செயல்பட கூடாது. அவர் எதிர்க்கட்சி தலைவராக ஆலோசனைகள் வழங்க வேண்டும். ஊழல் குறித்து ஆதாரத்துடன் நிரூபித்தால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story